புதுடெல்லி,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மறுத்துள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என எச்சரிக்கிறேன். நான், அப்போது அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ர் மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்க சென்றிருந்தேன்.
மேலும், அங்கு நடந்த இந்திய தூதரகங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நான் தங்கியிருந்த காலத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார். எந்த கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பிதழ் பற்றி பேசப்படவில்லை.
நமது பிரதமர் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய நிகழ்வுகளில் இந்தியா சார்பில் சிறப்பு தூதர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். ராகுல் காந்தியின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் அவை வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்” என சாடியுள்ளார்.