ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை – இந்திய முன்னாள் வீரர்

மும்பை,

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

இந்த தொடரில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சு முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தான் நம்பி உள்ளது. அதில் காயத்தில் இருந்து மீண்டு வந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வரும் முகமது ஷமி இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாதது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்நிலையில், முகமது ஷமி முகமது ஷமி தாக்கத்தை ஏற்படுத்தாதது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது எனவும், ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை என்றும் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நமது வேகப்பந்து வீச்சாளர்களால் நாம் எந்தளவுக்கு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்?. ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாதது கண்டிப்பாக வலியைக் கொடுக்கும் என்பது உண்மை. ஆனால், அவர் இல்லாமல் நம்முடைய வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதையே இந்தத் தொடரில் பார்த்துள்ளோம். ஷமி கம்பேக் கொடுத்தது முதல் இன்னும் டாப் கியரை எட்டவில்லை. அதை விரைவில் எட்டுவார் என்று நம்புகிறோம்.

அவரது வேகம் குறைந்துள்ளது. 132 கிலோமீட்டர் வேகத்தில் புவனேஸ்வர் குமார் பந்து வீசினால் அபாரமாக இருக்கும். ஏனெனில், அந்த வேகத்தில் அவர் துல்லியமாக இருப்பார். ஆனால், அதே வேகத்தில் ஷமியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில் 137 -138 கி.மீ வேகத்தில் தான் அவரால் பந்தை நகர்த்தி சிறந்த ஆட்டத்தை கொண்டு வர முடியும். ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை.

அடில் ரஷித் போன்றவர் அவரை 3 தொடர்ச்சியான பவுண்டரிகள் அடித்தால் அவர் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். ரன்களையும் வாரி வழங்குவதால் அவரிடம் கேப்டனால் 10 ஓவர்கள் வழங்க முடியவில்லை என்பது பிரச்சனையாகும். அந்த வகையில் அவர் எப்போது தயாராவார்? ஷமி தனது சிறந்ததிலிருந்து கொஞ்சம் தடுமாறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.