புதுடெல்லி: டெல்லில் இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக காலை 5.25 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மீட்பு பணிகளுக்காக பல குழுக்களை நாங்கள் அனுப்பி வைத்தோம். இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் சென்றோம். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் போலீஸாருக்கு தெரிவித்துள்ளோம்.” என்றார்.
கனமழையால் சாலைகளில் நீர் தேக்கம்: டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதையும், சாலையில் தேங்கிய நீரினால் மக்கள் சிக்கித் தவிப்பதையும் காட்டும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மின்டோ சாலையில் பாதியளவு மழைநீரில் மூழ்கிய கார் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மின்டோ சாலை, ஆர்.கே.புரத்தில் உள்ள மேஜர் சோம்நாத் மார்க் மற்றும் கான்புரி போன்ற பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முதல்வர் ரேணுகா குப்தா மற்றும் மூத்த அதிகாரிகள் சாலையில் நீர் தேங்கியிருப்பதை ஆய்வு செய்தனர். முதல்வர் கூறுகையில், “மோசமான வடிகால் வசதி மற்றும் சாலைகளால் நீர் தேங்கி நிற்கிறது” என்றார்.
100 விமானங்கள் தாமதம்: மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களும் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளன. டெல்லி மட்டுமல்லாது சில வட மாநிலங்களிலும் மழை பதிவாகி உள்ளது.
வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை: முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்திருத்தது குறிப்பிடத்தக்கது. அதே போல பாலம் மற்றும் பிரகதி மைதான் ஆகிய பகுதிகளில் மணிக்கு 74+ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதே போல தலைநகரின் பல்வேறு இடங்களிலும் பலத்த வேகத்தில் காற்று வீசியுள்ளது. மழை குறையும் வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், பயணம் செய்வதைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.