போர் தொடக்கத்தை நீங்கள் சொல்லுங்கள்..முடிவை நாங்கள் சொல்கிறோம் – பாகிஸ்தான் கொக்கரிப்பு

இஸ்லாமாபாத்,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.அந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நேரத்தில், எந்த இலக்கு மீது தாக்குதல் நடத்துவது என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு முழு அதிகாரம் இருப்பதாக கூறினார். இதனால், பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில், போர் எங்கே, எப்போது துவங்குவது என நீங்கள் (இந்தியா) முடிவு செய்யுங்கள், இறுதி முடிவை நாங்கள் (பாகிஸ்தான்) அது எங்கு முடியும் என்பதை சொல்கிறோம்’ என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவுக்கு எதிராக கொக்கரித்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா ஏதேனும் தாக்குதலை நடத்தினால், அதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என மூன்று முனைகளிலும் பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை முழுமையாக தயாராக உள்ளது.பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். எதிர் தாக்குதலுக்கு நாங்கள் தயராக உள்ளோம். ஆயுதப்படைகள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா எப்படி ஒரு சில நிமிடங்களில் முடிவு செய்தது? தாக்குதல் நடந்த இடம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (எல்ஓசி) சுமார் 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு கடினமான பாதை வழியாக யாராவது 10 நிமிடங்களில் அங்கு எப்படி அடைய முடியும்?’உள்நாட்டு அரசியல் ஆதாயங்களுக்காக, குறிப்பாக தேர்தலுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான சூழலை உருவாக்க, பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களை இந்திய அரசாங்கம் ஆயுதமாகக் பயன்படுத்துகிறது.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்கள் போலி என்கவுண்டர்களில் கொல்லப்படுவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஒருபோதும் ஆக்கிரமிப்பைத் தொடங்காது ஆனால் தூண்டப்பட்டால், நாங்கள் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.