`ஸ்கிரிப்டை படித்த பா.ரஞ்சித், நானே..!’ – திரைப்படமாகும் பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' நாவல்

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘கூளமாதாரி’ நாவல் திரைப்படமாக உருவெடுக்கிறது.

அவரது முக்கியமான நாவலான கூளமாதாரி சினிமாவாக மாற்றம் பெறுவது பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம்.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

என்னுடைய தேர்வு அதுதான்

“என்னுடைய ‘கூளமாதாரி’ நாவலை பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பல மேடைகளில் மிகவும் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஒரு நாவலை படமாக எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய தேர்வு அதுதான்.

நான் அந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்.

இப்படி இருக்கும்போது இயக்குநர் ராஜாகுமார் என்பவர் ‘கூளமாதாரி’ நாவலை படமாக்க ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கான அனுமதியை தாங்கள் எனக்கு தர வேண்டும் என கேட்டு வந்தார்.

அந்த நாவலின் ஆன்மா கெட்டுவிடாமல்..!

நான் அவரிடம் ஏற்கனவே பா.ரஞ்சித் இந்த நாவலை படமாக்க விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவர் பெரிய படங்களை இயக்குவதால் தற்போது இதை எடுத்து செய்ய முடியவில்லை.

எனவே அவரிடம் கேட்டு வாருங்கள் என அனுப்பி விட்டேன். அவர் பா.ரஞ்சித் அவர்களை பார்த்து தனது ஸ்கிரிப்ட்டையும் விருப்பத்தையும் கொடுத்து பேசியிருக்கிறார்.

ஸ்கிரிப்ட் வாங்கி படித்துப் பார்த்த ரஞ்சித் அவர்கள் அதில் திருப்தி அடைந்து அவரே ‘கூளமாதாரி’ படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக தயாரிக்கிறார்.

பெருமாள் முருகன்

அதனால் டைரக்டர் ராஜாகுமார் கூளமாதாரி படத்தை டைரக்ட் செய்வது உறுதியாகிறது. படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

அந்த நாவலின் ஆன்மா கெட்டுவிடாமல் அந்தப் படம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு கூடியிருக்கிறது. இயக்குநரின் நல்ல திறமையும் இந்த மாதிரி படைப்புகளின் மீது நம்பிக்கை கொண்ட நீலம் பட நிறுவனமும் சேர்ந்து எனக்கு இந்த நம்பிக்கையை அளித்திருக்கிறது.

தமிழ்ச் சமூகம் ஒரு நல்ல திரைப்படத்திற்காக எதிர்நோக்கி காத்திருக்கலாம்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.