ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ராணுவ வீரர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில், அந்த வாகனத்தின் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ராணுவ வாகனம் முழுவதுமாக நொறுங்கிவிட்டது.