சம்மன் அனுப்பாமல் யாரையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்த கூடாது என காவல் ஆய்வாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிரான சிவில் வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தன்னை விசாரணை என்ற பெயரில் அழைத்து எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என உத்தரவிட கோரி எம்.ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில், ‘மனுதாரருக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
பதிலுக்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.டி.அருணன், ‘‘மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனது இஷ்டம்போல விசாரணைக்கு வரவழைத்து மனுதாரரை துன்புறுத்தி வருகிறார்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முறையான சம்மன் இல்லாமல் யாரையும் விசாரணை என்ற பெயரில் அழைக்க கூடாது. விசாரணைக்காக வரும்படி அழைத்து அவர்களை போலீஸார் துன்புறுத்த கூடாது. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் சட்ட ரீதியாக சம்மன் அனுப்பி, அதில் விசாரணைக்கான நேரம், இடம் போன்றவற்றையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பெரும்பாலான வழக்குகளில், போலீஸார் தங்களை விசாரணைக்கு அழைத்து தொந்தரவு செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அதிக அளவில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதுபோன்ற சூழலில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்துவிட முடியாது. ஒரு புகார் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
எனவே, புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் அல்லது சாட்சியம் அளிக்க வருபவர்களிடம் முறையாக விசாரணை நடத்தி அதுகுறித்த விவரங்களை காவல் நிலையத்தில் உள்ள வழக்கு டைரி, பொது டைரி போன்றவற்றில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். இந்த விசாரணை சட்டப்பூர்வமாகவே இருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை அனைத்து காவல் ஆய்வாளர்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.