‘பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு’ – தேவகவுடா உறுதி

புதுடெல்லி: பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி. தேவகவுடா உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, “ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். கடினமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பிரதமரை நான் வாழ்த்துகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து நதி நீர் பங்கீடு ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானியர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படை தலைமை தளபதி ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார். இதையடுத்து அடுத்த 36 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என உளவுத்தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தா வுல்லா தரார் கூறினார்.

சிந்து போர் பயிற்சி என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் 450 கி.மீ சென்று தாக்கும் அப்தலி என்ற ஏவுகணையை சோதனை செய்து பதற்றத்தை அதிகரித்தது. இந்நிலையில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பிரதமர் மோடியை நேற்று முன்தினம் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோரை பிரதமர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தாக்குதல் நிச்சயம்: 2016-ல் உரி பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தி தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் குண்டு வீசின. இதற்கிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘பிரதமர்மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயம் நடைபெறும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்காக, நமது எதிரிகளுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.