புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் பிறகு இந்திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன.
இந்தியாவின் முன்னேற்பாடுகளை கண்டு, பாகிஸ்தானில் அச்சம் அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் ஏற்பட்டால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இதற்கு பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானிடம் தற்போது 96 மணி நேரம், அதாவது 4 நாட்கள் மட்டுமே பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை இயக்குவதற்கான வெடிமருந்துகள் உள்ளன. இதனால் மிகவும் ஆபத்தான சூழலுக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது,இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாகிஸ்தான் எல்லைகளில் பணியாற்றும் இந்திய உளவுத்துறை வட்டாரம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ உத்தி இந்தியாவுக்கு எதிராக அதன் நிலங்களை கைப்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு பாகிஸ்தானுக்கு 155 மிமீ குண்டுகள் மற்றும் 122 மிமீ ராக்கெட்டுகள் தேவை. அவை இப்போது அதன் கையிருப்பில் இல்லை. ராணுவத்துக்கான வெடிமருந்துகளை தயாரிக்கும் பாகிஸ்தான் ஆர்டினன்ஸ் தொழிற்சாலையானது காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய தேவை காரணமாக புதிய பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வெகு காலமாகி விட்டது.
பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுக்கு அதிக அளவிலான வெடிமருந்துகளை விற்றுள்ளது, இதனால் அதன் சொந்த ராணுவ இருப்புகள் கிட்டத்தட்ட காலியாகிவிட்டன. இதனால் ராணுவம் பலவீனம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நிலையும் வெடிமருந்துகளை உருவாக்கும் அளவுக்கு இல்லை. அங்கு பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. கடன் அதிகரித்து வருகிறது. அந்நியச் செலாவணி இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.
வெடிமருந்து பற்றாக்குறையில் சிக்கியுள்ள பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு இணையான ஆயுதங்களும் இல்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் வெளியிடுவதை நிறுத்தவில்லை.பாகிஸ்தான் அமைச்சர்களான ஹனிஃப் அப்பாஸி, அதாவுல்லா தரார், காஜா ஆசிப் ஆகியோரும் தாக்குதல் மிரட்டல் விடுத்திருப்பது அந்நாட்டில் பதற்றம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.சர்வதேச நாடுகளிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் பாகிஸ்தான் கெஞ்சியபடி இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் மக்கள் கோதுமை மாவு மற்றும் தண்ணீருக்காக உள்நாட்டில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.