ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை கடை உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூவைச் சேர்ந்த மதனிகா என்ற பக்தர் நேற்று பிரசாத கடையில் வாங்கிய புளியோதரை பிரசாதத்தில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இத்தகவல் அறிந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சாமிதுரை கூறும்போது,“கோயிலில் பிரசாதம் விற்பனை செய்ய திருச்சியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

இங்கு இன்று (நேற்று) விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் குட்டி பாம்பு உயிரிழந்த நிலையில் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, விற்பனைக்கு வைக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.