புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘சிந்தூர்’ தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன் விவரம் வருமாறு:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிரவாதம் ஒரு அவமானம். கடந்த காலங்களை பார்க்கும் போது ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போகிறது என்பது மக்களுக்கு தெரியும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும். இரு நாடுகளிடமும் நாங்கள் பேசி வருகிறோம். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள பதற்றத்தை தணிக்க சீனா தயாராக உள்ளது.
ரஷ்ய வெளியுறவுத் துறை: இரு நாடுகளுக்கு இடையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இந்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களுடனும் தொலைபேசியில் பேசினோம். இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
பிரிட்டன் வர்த்தக செயலர் ஜோனாத்தன் ரெனால்ட்ஸ்: இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் பிரிட்டன் ஆதரவு அளிக்கும். நாங்கள் இரு நாடுகளுக்கும் நண்பர்கள். அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தை உட்பட எந்த நடவடிக்கை எடுத்தாலும் இரு நாடுகளுக்கும் உதவ பிரிட்டன் தயார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ குத்தேரஸ்: இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். ராணுவ ரீதியிலான தாக்குதலை தீவிரமாக நடத்தக் கூடாது. இந்தியா – பாகிஸ்தான் போரை உலக நாடுகளால் தாங்க முடியாது.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவென் அசார்: தங்கள் நாட்டை பாதுகாக்க பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் முழு ஆதரவளிக்கிறது. அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி விட்டு எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது என்பதை தீவிரவாதிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.