ராமேசுவரம் கடலில் சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் கொடுக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

ராமேசுவரம்: நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன

மேலும், நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகையும் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் கடலோர பகுதி சர்வதேச கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து படகுகள் மற்றும் கப்பல்கள் பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய இடங்களில் உள்ள கடற்படை முகாம், கடலோர காவல்படை, ஐஎன்எஸ் பருந்தில் பணிபுரியும் வீரர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும், விடுப்பு எடுக்காமல் பணிபுரியுமாறும அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடலுக்கு செல்லும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் சந்தேகப்படும்படியான படகுகள், நபர்களை கண்டால் உடனடியாக மரைன் போலீஸார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.