புதுடெல்லி: இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தனது தாக்குதல்களை திட்டமிட்டது. இந்தத் தாக்குதல் இன்று (மே 7) அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்குள் நிறைவடைந்தது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இவற்றின் மீது தாக்குதல் நடத்த 24 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ராணுவத்தின் 24 ஏவுகணைகளும் துல்லிய தாக்குதல்களை நடத்தியதாகவும், பயங்கரவாத கட்டமைப்பின் பகுதிகளாக இருந்த கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், நிலை வசதிகள் ஆகியவை அழிக்கப்பட்டதை உளவுத் துறை உறுதிப்படுத்தியதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கை விரிவானதாக இருந்தபோதிலும், பாகிஸ்தானின் எந்த ராணுவ கட்டமைப்புகளும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் தரையிலிருந்தும், வான்வழியாகவும் ஏவப்பட்டன. கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நேரலையாக கண்காணிக்கப்பட்டன. இதன்மூலம், குறைந்தபட்ச பொதுமக்கள் உயிரிழப்புகளுடன் இலக்குகள் குறிவைக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களை அழித்தொழிக்க பல போர்முனைகள் ஒரே நேரத்தில் தாக்கின. ஆபரேஷன் சித்தூரில் தாக்குதல் நடத்திய இலக்குகள் குறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின்படி கீழ்கண்ட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து முகாம்களின் விபரம்:
1. முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது.
2. முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் ஒரு நிலையாகும். இது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட தளமாகும்.
3. கோட்லியில் உள்ள குல்பூர் முகாம்: இது ஜம்முவின் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பேஸ் கேம்ப்களாகும். பூஞ்ச் பகுதியில் 2023, ஏப்.20 மற்றும் 2024, ஜூன் 9-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.
4. பிம்பாரில் உள்ள பா்னாலா முகாம்: இங்கும் ஆயுதங்கள், வெடிப் பொருட்களைக் கையாளுதல் மற்றும் பதுங்கி வாழ்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
5. கோட்லியில் உள்ள அப்பாஸ் முகாம்: லஷ்கர் இ தொய்பாவின் பையாதீன் இங்கு உருவாக்கப்பட்டது. இது 15 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டது.
பாகிஸ்தானில் உள்ள முகாம்கள்:
6. சியால்கோட்டில் உள்ள சர்சால் முகாம்: இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் நான்கு போலீஸார் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றனர்.
7. மெஹ்மூனா ஜோயா முகாம்: பதன்கோட் விமான படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த முகாமில் இருந்து தான் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.
8. முரித்கேயில் உள்ள மார்காஸ் தைபா முகாம்: கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் இந்த முகாமில் பயிற்சி பெற்றனர். அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி இந்த முகாமில் பயற்சி பெற்றவர்கள்.
9. பஹவல்புரில் உள்ள மார்கஸ் சுபனல்லா: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் தலைமையகம். ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி மற்றும் போதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் சொல்வது என்ன? > முழு விவரம்: ‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான்