தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 10) முதல் வரும் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி வேலூரில் 4 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, திருச்சி மாவட்டம் பொன்னணியாறு அணை, திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டபட்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.