அதிகாலையில் பாய்ந்த பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம் – வீடியோ பதிவு வெளியீடு

புதுடெல்லி: எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றையும் ராணுவம் பகிர்ந்துள்ளது.

அதில், ‘தேசத்தின் மேற்கு எல்லை பகுதியில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றாக இன்று (மே 10) காலை 5 மணி அளவில் அமிர்தசரஸில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டன. அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து அழித்தனர்.

இந்தியாவின் இறையாண்மையை மீறும், நாட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பாகிஸ்தானின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களை ராணுவம் முறியடிக்கும்’ என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்கள் மூடல்: இதனிடையே, எல்லையில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மே 14 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லெஹ், லூதியானா, லே, லூதியானா, பத்ரா, லூதியானா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ் மற்றும் உத்தரலை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.