மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற வெற்றி தின பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். நாஜி ஜெர்மனி படைகளை வெற்றி கொண்டதை குறிக்கும் 80 ஆண்டு தினத்தையொட்டி ரஷ்யாவில் மாபெரும் வெற்றி தின பேரணிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உக்ரைனில் போரிடும் ரஷ்ய படைகளுடன், சீன படைகளும் இணைந்து அணிவகுப்பு மேற்கொண்டன.
இந்த ஆண்டு ரஷ்ய வெற்றி தின அணிவகுப்பில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனா, பிரேசில், ஸ்லோவேக்கியா, செர்பியா உட்பட 27 உலக நாடுகளின் தலைவர்கள் இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்றனர்.
உக்ரைனில் நான்கு ஆண்டுகள் போர் நீடித்து வந்தாலும் ரஷ்யா உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கு சான்றாக வெளிநாட்டு தலைவர்களின் வருகை அமைந்திருந்தது. 2022-ம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதல் முழு அளவிலான போராக மாறியதற்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மிக நீண்ட உரையை ஆற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “நாஜி படையினரின் மிக கொடூரமான, இரக்கமற்ற தாக்குதல்களை சோவியத் யூனியன் எதிர்கொண்டது. உக்ரைன் மீதான படையெடுப்பில் உண்மையும், நீதியும் நம் பக்கம் உள்ளன’’ என்றார். மியான்மர், பர்கினா பாசோவின்ராணுவ ஆட்சிக்குழுக்களின் தலைவர்களும் இந்த வெற்றி தினவிழாவில் பங்கேற்றனர்.