புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி திரும்பியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது.
எல்லை பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மின்விளக்குகள் எரியும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால்,மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதலால் அபாய ஒலியும் அடிக்கடி எழுப்பப்பட்டது. தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள மக்கள், பதுங்கு குழிகளுக்கு சென்று தங்கினர். இதனால் எல்லை மாநிலங்களில் வசித்த மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். தொடர்ந்து 4 நாட்களாக தூக்கம் இன்றி தவித்தனர்.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், இரவு வரை எல்லைபகுதிகளில் குண்டு சத்தம் கேட்டபடி இருந்தது. ஆனால், நள்ளிரவுக்கு பிறகு, எல்லை மாநிலங்களில் அமைதி நிலவியது. காஷ்மீரில் உள்ள எல்லை கிராமங்களில் பதுங்கு குழிகளில் வசித்த மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். பஞ்சாப்பில் நேற்று முன்தினம் இரவு அமைதி திரும்பியது. அமிர்தசரஸ் நகரில் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நேற்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது.
பதான்கோட், அமிர்தசரஸில் நேற்று குண்டு சத்தம் கேட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். வெடிக்காத குண்டுகளை ராணுவ வீரர்கள் அழித்ததால் சத்தம்ஏற்பட்டதாக பின்னர் தகவல் வெளியானது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மின் விநியோகம் சீரானது: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் மின் விநியோகமும் நேற்று சீரானது.ராஜஸ்தானில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேல் அபாய ஒலி எழுப்புவது நிறுத்தப்பட்டது. ஜெய்சல்மார் மாவட்டத்தில் மக்கள் நேற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனாலும், ட்ரோன் தாக்குதல் நடக்கக்கூடும் என்று கருதி போலீஸார், மாவட்ட நிர்வாகத்தினர் விழிப்புடன் இருந்தனர்.