''காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்'': ட்ரம்ப்

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கக்கூடிய தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது. (மோதல் தொடர்ந்திருந்தால்) மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம்! உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் வீரதீரமான முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.

அதோடு, “ஆயிரம் ஆண்டுகளுக்குப்” பிறகு, காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க நான் உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாகச் செயல்பட்டதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமையை கடவுள் ஆசிர்வதிப்பாராக!!!” என்று தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலும் பதிலடியும்: கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் நிகழ்ந்தது. இதில், பாகிஸ்தானின் பல்வேறு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை இந்திய ராணுவம் அழித்தது.

ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புதல்: இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர்.

இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “துப்பாக்கிச் சூட்டினை நிறுத்துதல் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சமரச பேச்சு: இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை அவர் அறிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.