வாஷிங்டன்,
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பரிந்துரையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நன்றி எனவும் கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும்,இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நீடித்த போர்பதற்றம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. இந்தியா, பாகிஸ்தான் இது பற்றி அறிவிப்பதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இத்தகைய சூழலில்தான், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறி வரும் நிலையில், டிரம்பின் இத்தகைய பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.