சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தனர்.
இதையடுத்து விராட் மற்றும் ரோகித்துக்கு மாற்றும் வீரர்களை தேர்வு செய்யவும், இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திலும் பி.சி.சி.ஐ உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியை பும்ராவிடம் கொடுக்க வேண்டும் எனவும், விராட் விளையாடிய 4வது இடத்தில் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் விளையாட வேண்டும் எனவும் இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் உறுதியாக இல்லை. கேப்டன்ஷிப் பொறுப்பு பும்ராவிடம் கொடுக்கப்பட வேண்டும்.
ஒருவேளை அவர் பிட்டாக இல்லாத பட்சத்தில் கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோர் இந்தியாவை தலைமை தாங்க வேண்டும். விராட் கோலி விளையாடிய நம்பர் 4வது இடத்தில் இனிமேல் ராகுல் விளையாட வேண்டும். முன்னோக்கி செல்லும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார். அதற்கான நல்ல டெக்னிக் கொண்டுள்ள அவருக்கு அணி நிர்வாகம் நிலையான இடத்தைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.