இம்பால்: மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா – மியான்மர் எல்லைக்கு அருகில், மணிப்பூரின் சந்தேல் மாவட்டம், நியூ சாம்தால் கிராமத்தில் ஆயுதமேந்திய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக புதன்கிழமை உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து கணிசமான அளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன” என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொஹிமாவில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அங்கு ராணுவ நடவடிக்கை தொடர்கிறது. அது முடிவுக்கு வந்தவுடன் அது தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றார். இதற்கிடையில் மணிப்பூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்தாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
தவுபால், காக்சிங், விஷ்ணுபூர். சூரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர். இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.