மதுரை மக்களின் பாசம் என்றைக்கும் மாறாது – விஷால் நெகிழ்ச்சி

மதுரை: பாசம், உணவு விஷயத்தில் மதுரை மக்கள் மாறமாட்டார்கள் என, நடிகர் விஷால் கருத்து கூறினார்.

நடிகர் விஷால் ரசிகர் மன்ற செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் என்பவரின் திருமணம் மதுரை திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரை வருகை தந்தார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும். எங்கள் அம்மா வீட்டுக்குள் சேர்க்கமாட்டார். எங்கள் அம்மா கொடுத்த புடவையை அம்மனுக்கு கொடுத்து தரிசித்தேன். 2006-ல் ‘ திமிரு’ திரைப்பட படப்பிடிப்புக்கு பிறகு 19 ஆண்டுக்கு கழித்து தற்போது வந்துள்ளேன். மதுரை மக்கள் என்னை கைவிட்டுவிட மாட்டார்கள். நானும் மதுரைக்காரன் தான்.

நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. 6 மாதத்தில் முடிக்க வேண்டியது. நடிகர் சங்கம் தேர்தல் விவகாரத்தால் 3 ஆண்டுகள் தாமதமாகியது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரிதாகிவிடும்.

இந்தியா -பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம். மக்களை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எல்லா நாட்டுக்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளன. இதைபுரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை.

மதுரை மக்கள் ஒரு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். ஒன்று பாசம், மற்றொன்று உணவு. இவ்விரண்டு விஷயத்திலும் மாறவே மாட்டார்கள். நூறு ஆண்டு கழித்து வந்தாலும் அதே பாசம் , சிரிப்பு மதுரைக்காரர்களிடம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.