சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது: நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.8,560 கோடி நிதியுதவி அளிக்க ஐஎம்எப் ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில், அடுத்த கட்ட நிதி தொகுப்பை விடுவிப்பதற்கு பாகிஸ்தானுக்கு 11 நிபந்தனைகளை ஐஎம்எப் விதித்துள்ளது.
1. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.
2. 17.6 டிரில்லியன் ரூபாய் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும்.
3. ஆண்டுக்கு 2 முறை எரிவாயு விலையை உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கு இணையாக எரிவாயு விலையை உயர்த்த வேண்டும்.
4. மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவை வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்குள் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
5. 2027-ம் ஆண்டுக்குப் பிறகு நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உருவாக்க வேண்டும்.
6. சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு நிர்வாக செயல்திட்டத்தை வெளியிட வேண்டும்.
7. வரி செலுத்துவோர்களை அடையாளம் காண்பது, பதிவு செய்வது, உரிய வரி வசூலிப்பது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்கள் ஜூன் மாதத்துக்குள் அமைக்க வேண்டும்.
8. தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு மாற்றும் வகையில் மே மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.
9. மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3.21 என்ற உச்சவரம்பை ஜூன் மாதத்துக்குள் நீக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.
10. 2035-ம் ஆண்டுக்குள் தொழி்ல்துறை பூங்காக்கள் மண்டலங்களுக்கான அனைத்து நிதி சலுகைகளையும் நீக்குவதற்கு இந்தாண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் ஒரு மாற்று திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
11. ஐஎம்எப் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026-ம் நிதியாண்டின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும். வரும் ஜூன் மாதத்துக்குள் அதை செய்து முடிக்க வேண்டும்.
இந்த புதிய நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் நிதியுதவியின் அடுத்த கட்ட தொகுப்பு விடுவிக்கப்படாது என பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்தால் அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று இந்தியா ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அதுதொடர்பான எந்த நிபந்தனைகளையும் ஐஎம்எப் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.