புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் என தெரிவித்து உள்ளது. 2002-ம் ஆண்டில் இந்த விதியில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வின்படி, புதிதாக சட்டப்படிப்பு படித்தவர்களும் இந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது, புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. 3 ஆண்டு கால அனுபவம் என்பது தடையாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த தளர்வு திருத்தி அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் ஏ.ஜி. மசீ மற்றும் கே. வினோத் சந்திரன் உள்ளிட்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி துறை திறமையாக செயல்படுவதற்கு சட்ட அனுபவம் அவசியம் என கோர்ட்டு தெரிவித்தது.
இதன்படி, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 3 ஆண்டு அனுபவ காலம் தொடங்கும். 10 வருடம் வழக்கறிஞராக இருந்த ஒருவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீதி துறை அதிகாரி ஒருவரின் கையொப்பம் ஆகியன அனுபவத்திற்கான சான்றாக ஏற்று கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.