டெல்லியில் இடியுடன் மழை; கோவாவுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கோவாவுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், ராஜஸ்தானுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா, “டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டெல்லியில் புதன்கிழமை இரவு புழுதிப் புயல்கள், இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்தது. வானிலையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் “சூறாவளி சுழற்சி”யின் விளைவாகும்” என்றார்

இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை அலுவலகத்தின் தகவல்களின்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை சுற்றி இருக்கும், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸை சுற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, “தெற்கு கொங்கன்-கோவா கடற்கரையில் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இது மேலும் தீவிரமடையும் வாய்ப்பும் உள்ளது.

எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு கொங்கன்-கோவா பகுதியில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய மகாராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிராவின் மேற்கு கடற்கரையின் அருகிலுள்ள பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மே 24 அன்று கடலோர கர்நாடகாவுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மே 22 முதல் 28 வரை கேரளா மற்றும் கர்நாடகாவிலும் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா, கொங்கன் மற்றும் கோவா மற்றும் அதை ஒட்டிய குஜராத் கடற்கரைகள் மற்றும் லட்சத்தீவு பகுதி, கொமோரின் பகுதியில் உள்ள மீனவர்கள் மே 22 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பகுதிகளுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

மே 22 முதல் 24 வரை மேற்கு ராஜஸ்தானில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை மிகவும் அதிகமாக இருக்கும். அதேபோல இன்று கிழக்கு ராஜஸ்தானிலும், மே 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மேற்கு ராஜஸ்தானிலும் வெப்ப அலை அதிகளவில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.