அயோத்தி: “பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக எச்சரித்தார்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, ஸ்ரீ ஹனுமன் கர்ஹி மந்திரில் ‘ஸ்ரீ ஹனுமத் கதா மண்டபம்’ திறப்பு விழா நடத்திய பிறகு பேசிய யோகி ஆதித்யநாத், “இது புதிய இந்தியா. புதிய இந்தியா யாரையும் சீண்டுவதில்லை. ஆனால், யாராவது அதை சீண்டிவிட்டுச் சென்றால், அது அவரை விட்டு வைப்பதில்லை. ஹனுமானும் அதையேதான் சொன்னார். ராவணன் அவர் முன் தோன்றியபோது, ராவணன் அனுமனிடம், “நீ ஏன் என் மகனைக் கொன்றாய்?” என்று கேட்டார். அதற்கு நான் அக்ஷய குமாரனைக் கொல்லவில்லை. அவனை பழிவாங்கினேன். அவனுக்கு எந்த பலமும் இல்லாததால் அவன் இறந்தான் என்று கூறினார்” என்று தற்போதைய சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய ஆயுதப் படைகள், பாகிஸ்தானைத் தாக்கவில்லை. அப்பாவி இந்திய குடிமக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறிவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் பதிலடி கொடுத்தது. பதிலடி கொடுக்கும் விதமாக நடந்த இந்திய ராணுவ நடவடிக்கையில் 124 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனவே, இது இந்தியாவின் தவறு அல்ல. பாகிஸ்தானில் அமர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களின் தவறு.
பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். பாகிஸ்தானின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்தது போதும். இப்போது நேரம் வந்துவிட்டது. அந்நாடு தனது சொந்த செயல்களுக்காக தண்டனையை எதிர்கொள்கிறது” என்றார்