சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்: ஐ.நா.வில் இந்தியா ஆணித்தரமாக வாதம்

ஸ்லோவேனியா: மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.

ஸ்லோவேனியாவில் ‘ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் – பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஆற்றிய உரையில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 1960-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் தூதுக்குழுவால் மேற்கொள்ளப்படும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். ஒரு மேல் நதி நீர் நாடாக இந்தியா எப்போதும் பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தியா 65 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் நல்லெண்ணத்துடன் நுழைந்தது. ஆனால், இந்தியா மீது மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் உணர்வை மீறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் இந்தியா அசாதாரண பொறுமையையும், தாராள மனப்பான்மையையும் காட்டியிருந்தாலும், பாகிஸ்தானின் அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதம், இந்திய மக்களின் உயிர்கள், மத நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பை பணயக்கைதியாக வைத்திருக்க முயல்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தின் மாற்றங்கள் குறித்து விவாதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா முறையாகக் கேட்டுக் கொண்டுள்ளது, ஆனால் அந்நாடு தொடர்ந்து இவற்றை நிராகரித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த அணுகுமுறை, இந்தியாவின் சட்டப்பூர்வமான உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.

மேலும், கடந்த 65 ஆண்டுகளில், எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள் மட்டுமல்லாமல், எரிசக்தி உற்பத்தி, காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை மாற்றம் ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் தேவைகளின் தொலைநோக்கு அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் தேவைப்படுகிறது.

ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் மற்றும் நீர் பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக அணை உள்கட்டமைப்பிற்கான தொழில்நுட்பம் மாறியுள்ளது. சில பழைய அணைகள் கடுமையான பாதுகாப்பு கவலைகளை எதிர்கொள்கின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்படும் விதிகளில் ஏற்படும் எந்தவொரு மாற்றங்களையும் பாகிஸ்தான் தொடர்ந்து தடுத்து வருகிறது.

2012-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள துல்புல் திட்டத்தை பயங்கரவாதிகள் தாக்கினர். இந்த இழிவான செயல்கள் இந்திய திட்டங்களின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் உயிருக்கும் தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான், பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக இருக்கும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான அதன் ஆதரவை நம்பகத்தன்மையுடனும், மாற்ற முடியாத வகையிலும் முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா இறுதியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்பது தெளிவாகிறது.” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.