புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, டெல்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு மழை குறித்த ரெட் அலர்ட்டை கொடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், டெல்லி மட்டுமல்லாது ஹரியானாவின் சில பகுதியிலும் மழை பதிவானது.
டெல்லியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவு 11.30 முதல் அதிகாலை 5.30 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் சுமார் 81.2 மில்லி மீட்டர் மழை பொழிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங் பகுதியில் மணிக்கு 82 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
பாலம் பகுதியில் 68.1 மில்லிமீட்டர், பூசா 71 மில்லிமீட்டர், மயூர் விஹார் 48 மில்லிமீட்டர், டெல்லி பல்கலைக்கழகம் பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக டெல்லியில் வெப்பநிலையும் கடுமையாக சரிந்தது. பல்வேறு இடங்களில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் என இரவு 1.30 முதல் 2.30 வரை இருந்துள்ளது.
விமான சேவை பாதிப்பு: தேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாக உள்ள டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை விமான நிறுவனங்களும் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்தன. சனிக்கிழமை இரவு 11.30 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி வரையில் 200+ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தகவல்.
மழை காரணமாக பல்வேறு விமான நிறுவனங்களின் பயண சேவை பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. அதனால் பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு நேரத்தை அறிந்து விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் மூழ்கி நிற்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.