மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கை 50% ஆக உயர்த்த வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நாட்டிலுள்ள நகர்ப்புற மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி கொண்ட பெரிய திட்டம் அவசியம் என்றும் மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களின் தொலைநோக்குப் பார்வை. “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல். எங்கள் அரசில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். அதன் பயன்கள்தான் வளர்ச்சிக் குறியீடுகளாக எதிரொலிக்கின்றன.

குறிப்பாக, அண்மைக் காலங்களில் ஆண்டுதோறும் 8 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சி. கடந்தாண்டு நாட்டிலேயே அதிகமாக 9.69 சதவீத வளர்ச்சி என்ற பாய்ச்சலில் உள்ளது. இந்திய விடுதலை நூற்றாண்டில் 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை வைத்து உழைத்து வருகிறோம். இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்கள் பங்களிப்பு வலுவாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் தொழில்மயமாகியுள்ளது. ஆட்டோமொபைல் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, அனைத்து வளர்ந்து வரும் துறைகளிலும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 41 சதவீதம் தமிழகத்தில் உள்ளனர். 18 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், 1.14 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத்திட்டம், தோழி விடுதிகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், 4 ஆண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள் என எங்கள் திட்டங்களால், நகரமயமாக்கலில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.

அதிகரித்து வரும் நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள், நல்ல உட்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வழங்குவது நமது கடமை. நாட்டிலுள்ள நகர்ப்புறங்கள் மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி கொண்ட பெரிய திட்டம் அவசியம். அம்ருத் 2.0 திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவையாகும். இதை விரைவில் நீங்கள் உருவாக்க வேண்டும்.

மேலும், சுத்தமான கங்கை திட்டம் போல், தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகள், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க புதிய திட்டத்தை உருவாக்கி, திட்டங்களுக்கு அனைத்து மாநில தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளும்.

வரும் 2047-ம் ஆண்டு்க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்குமான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது. அவரது தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, கூட்டுறவு கூட்டாட்சி என்பது அவசியமான அடித்தளமாகும். எனவே, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைய, மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தரவேண்டும்.

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்எஸ்ஏ நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2,200 கோடி மத்திய நிதி தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி நிதியை விடுவிக்க வேண்டும்.

மாநிலத்துக்கான நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்கு போட்டு பெற வேண்டிய நிலை இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும். ‘கடந்த 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கான பகிர்வு வரிவருவாய் பங்கு 41 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் 33.16 சதவீதம் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான மாநில பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவது, தமிழகம் போன்ற மாநிலங்களின் நிதிநிலையை மேலும் பாதிக்கிறது. ஒருபுறம் மத்திய வரிப்பகிர்வு குறைவதால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி ஆகியவற்றால் பெரும் சுமை மாநில அரசுகளுக்கு ஏற்படுகிறது. எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்துவதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து மக்களும் வளமுடன் வாழும் வகையில், அனைத்து பண்பாடுகளும் செழிக்கும் வகையில் பன்முகத்தன்மை கொண்ட வலிமையான நாடாக இந்தியா திகழ தமிழகம் தனது சிறந்த பங்களிப்பை என்றும் வழங்கும். தற்சார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். அதற்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.