அமராவதி: ஆந்திராவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கடப்பா, சத்யசாய் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுபோல் தெலங்கானாவிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆந்திராவில் நேற்று கடப்பா, சத்யசாய் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், திருப்பதி, நெல்லூர், பிரகாசம், கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா முழுவதும் மழை: இதுபோல் தெலங்கானாவில் ஆதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வரும் வியாழக்கிழமை வரை மழை தொடரும் எனவும், போகப்போக தெலங்கானா முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.