ஜூன் மாதம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: திரிணமூல் கோரிக்கை

புதுடெல்லி: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக நின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பப்பட்டிருக்கும் தூதுக்குழுக்களையும் ஆதரித்தது. அரசுக்கு எங்களின் முழு ஆதரவினை வழங்கியிருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்போது, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் எழுப்பிய ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக ஜுன் மாதத்தில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.” என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரக் ஓ பிரேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவுக்கு எதிராக போராடும் கட்சிகளாகிய நாங்கள், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்றார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத நிலைகளின் மீது ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியா துல்லிய தாக்குகல் நடத்தியது. இந்தியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து மே 8, 9 மற்றும் 10 தேதிகளில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை விளக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், முக்கிய நட்பு நாடுகளுக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இந்த அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுக்களுக்கு, பாஜகவைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், திமுகவின் கனிமொழி, என்சிபி (சரத் பவார் அணி) யின் சுப்ரியா சுலே ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

இந்த ஏழு அனைத்துக்கட்சி குழுக்கள் 32 நாடுகளுக்கு பயணப்பட்டு வருகின்றன. இதில் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழுவில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி இடம் பெற்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.