சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வில் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்களை ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வின் முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மே 15-ம் தேதி வெளியிடப்பட்டன.
தற்போது கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சான்றிதழ்களை மேற்கண்ட இணையதளத்தில் மே 28 முதல் (நேற்று) ஜூன் 6-ம் தேதி வரை ஒருமுறை பதிவு (ஓடிஆர்) முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய காலத்துக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதர்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.