சென்னை: “அதிமுக திட்டங்களுக்குதான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் ஸ்டாலின்.
உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகுதானே உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது? அதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? உங்கள் காவல் துறை நீதியைப் பெற்றுத் தந்ததா? அப்படியென்றால், உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய எஸ்ஐடி விசாரணையை நீங்கள் இன்ஃப்ளூயன்ஸ் செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?
குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். “SIR”-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்ட நீதிக்கும் – பெண்கள் பாதுகாப்புக்கும் முற்றிலும் எதிரான ஆட்சி! இந்த ஆட்சி வீழும்! மக்களுக்கான அதிமுக ஆட்சி அமையும்! அந்த “SIR”-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றி! காவல் துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.