சண்டிகார்,
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
விமானம், ரெயில், பஸ் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் முதல் மற்றும் 2-ம் அலையின்போது தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டது. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதவிர பூஸ்டர் டோஸ்களும் போடப்பட்டன. இதன்பின்னர் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000 கடந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரை சேர்ந்த 40 வயது நபர் பஞ்சாபின் லூதியானா நகரில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது. அதனுடன் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை சண்டிகாரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணம் அடைந்துள்ளார்.
அவர், சமீபத்திய பரவலில் உள்ள ஜே.என்.1 வகையை சேர்ந்த தொற்றால் பாதிக்கப்பட்டாரா? என்ற விவரம் எதனையும் மருத்துவ நிர்வாகம் வெளியிடவில்லை. எனினும், சண்டிகாரில் கொரோனா தொற்றால் முதன்முறையாக ஒருவர் பலியாகி உள்ளார். இதனால், கண்காணிப்பு மற்றும் பரவலை தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.