புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது.
தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தார்.
விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. செபி ஊழியர்களும் அவர் மீது பணி சார்ந்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக லோக்பால் அமைப்பின் வசம் எதிர்க்கட்சிகளில் ஒன்றான திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதை லோக்பால் அமைப்பு விசாரித்தது.
இந்நிலையில், மே 28-ம் தேதி அன்று மாதபி புக் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவர் தொடர்பான புகாரில் வழங்கப்பட்ட சான்றுகள், புகார்கள் தகுதியற்றவை என்றும், அது அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கான அடிப்படையை நிறுவவில்லை என்றும் லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது.