வெளிநாட்டு மாணவர் விசா நேர்காணல்களுக்கு தற்காலிக தடை: அமெரிக்கா தடாலடி நடவடிக்கை

நியூயார்க்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் ஏற்பட செய்வேன் என கூறி வருகிறார்.

இந்நிலையில், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நேற்று புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. வகுப்புகளை பாதியில் நிறுத்துதல் அல்லது வகுப்புகளுக்கு செல்லாமல் தவிர்த்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவரின் விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நேர்காணல்களுக்கான திட்டமிடலை உடனடியாக நிறுத்தும்படி, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு டிரம்ப் அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், மறுஉத்தரவு வரும் வரை புதிய மாணவர் சேர்க்கை அல்லது மாணவர் பரிமாற்ற விசா வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைதளங்களில் அவர்களின் செயல்பாடுகளை சரிபார்க்கும் முறையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த நடவடிக்கை தற்காலிகம் என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட விசா நேர்காணல்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.