மாட்ரிட்
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். இதற்காக படகு மூலம் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் பயணித்துள்ளனர்.
ஸ்பெயினின் கனெரி தீவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் கடலில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.