ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று (மே 27) லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 227 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் சதம் விளாசி தனது ஃபார்மை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து 228 என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துரத்தியது.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் பெங்களூரு அணியும் இலக்கை நோக்கு வேகமாக நகர்ந்தது. எனவே ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஜிதேஷ் சர்மா 49 ரன்களில் இருந்த போது அந்த வாய்ப்பு கிடைத்தது. திக்வேஷ் ரதி வீசிய பந்தை ஜிதேஷ் சர்மா ரிவர்ஸ் ஸ்விப்பில் ஆடி கேட்ச் கொடுத்தார். ஆனால் செக் செய்து பார்க்கையில், அது நோ பாலாக மாறியது.
இந்த நிலையில் தான், பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி மன்கட் முறையை கையில் எடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் அதனை செய்தார். அதாவது 16.6 பந்தை வீச ஓடி வரும்போது ஜிதேஷ் சர்மா கிரீஸை விட்டு வெளியேறுவதை பார்த்தார். அப்போது தான் அவரை ரன் அவுட் செய்ய முடிவு செய்தார். மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பின்னர் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டார் பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி.
பொதுவாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்வது கிரிக்கெட் விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது என்ற பார்வை உள்ளது. அப்படி இருக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்றாவது நடுவர் ரிவ்யூ செய்து கொண்டிருந்தபோது, லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான் இந்த அவுட் முறையீட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தார். எனினும் அதற்குள் மூன்றாவது நடுவர் அதை ஆய்வு செய்தார்.
திக்வேஷ் ரதி பந்து வீசி முடிக்கும் நிலையில் தான் ரன் அவுட் செய்ததாகவும், அப்போது ஜிதேஷ் சர்மா கிரீஸ் உள்ளே இருந்ததாகவும் மூன்றாவது நடுவர் கூறினார். விதிப்படி பந்து வீசி முடிக்கும் முன்பே ரன் அவுட் செய்ய வேண்டும். அப்போது பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே சென்றதை நிரூபிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி திக்வேஷ் ரதி செய்தது ரன் அவுட் இல்லை என மூன்றாவது நடுவர் நாட் அவுட் தீர்ப்பை வழங்கினார்.
பண்ட்டை சாடிய அஸ்வின்
அதே நேரத்தில் ரிஷப் பண்ட்டும் தனது முறையீட்டை திரும்பப் பெற்றதால் அவரை பலரும் பாராட்டினர். களத்திலேயே ஜிதேஷ் சர்மா அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார். இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் ரிஷப் பண்ட்டின் செயல் பந்து வீச்சாளரை அவமானப்படுத்தும் செயல் என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். “ரிஷப் பண்ட் மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்ப பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம்.
அந்த பந்து வீச்சாளர் கூனிக்குறிகிப் போயிருப்பார். இனி இதைபோல் அவர் ரன் அவுட் செய்ய மாட்டார். ஏன் அதை அவர் மீண்டும் செய்யக்கூடாது? இது விதி சார்ந்த விஷயம். இங்கே அவர் அவுட் ஆனாரா இல்லையா? என்பது விஷயம் அல்ல. கேப்டன் அந்த முறையீட்டை திரும்ப பெற்றாரா இல்லையா? என்பதுதான் விஷயம். இங்கே நாம் கிரிக்கெட் விளையாட்டை பற்றி மட்டும் சில வினாடிகள் பேசுவோம்.
முடிவானது மூன்றாவது நடுவரிடம் சென்றது. அவர்கள் நாட் அவுட் என கூறினால், அது நாட் அவுட் தான். இதில் முறையீட்டை திரும்ப பெறும் அவசியம் எங்கே உள்ளது? ஒருவேளை திக்வேஷ் பந்து வீசி முடிக்கும் முன்பாகவே ஜிதேஷ் சர்மா கிரீஸை விட்டு வெளியே சென்றிருந்தால், அவர்கள் அவுட் என தீர்ப்பு அளித்திருப்பார்கள். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஒரு மோசமான விஷயமாக மாறி இருக்கும். அவர்கள் திக்வேஷ் ரதி மற்றும் ரிஷப் பண்ட்டை விரும்பி இருக்க மாட்டார்கள்” என கூறினார்.
அஸ்வின் ஏன் எதிர்க்கிறார்?
மன்கட் விதியை கிட்டதட்ட உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதன் முறையாக அஸ்வின் தான் மன்கட் முறையை கையில் எடுத்திருந்தார். விதியில் இருப்பதை செய்ததாக தனது வாதத்தை அஸ்வின் முன் வைத்தார். ஆனால் பலரும் அஸ்வினை கடுமையாக விமர்சித்தனர். அப்போது முதலே மன்கட் விதி மிகப்பெரிய விவாதமாகவே உள்ளது.
மேலும் படிங்க: ரிஷப் பண்ட்டை முட்டாள் என திட்டிய பெண்.. யார் இந்த மாளவிகா நாயக்?
மேலும் படிங்க: இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!