மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகையில் மத்திய அரசு 139 பத்ம விருதுகளை அறிவித்தது, இதில் ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். முதல்கட்டமாக 71 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ஏற்கெனவே வழங்கிய நிலையில், நேற்று (மே 27) 2வது கட்டமாக 68 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த முறை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில் 23 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில், நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பத்ம பூஷன் விருது பெற்றது குறித்துப் பேசிய ஷோபனா,” எனக்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது மிகவும் கவுரமாக இருக்கிறது. மிகப்பெரிய மேதைகளுடன் இந்த விருது எனக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதே சமயம் என்னுடைய குருக்களுக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மேலும் இந்திய அரசாங்கத்திற்கு என்னுடைய நன்றிகள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.