ஐ.பி.எல்.: இந்த அணிதான் சாம்பியன்.. இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் அவர்தான் – வாட்சன் கணிப்பு

சிட்னி,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்து பலரும் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் என்று நினைக்கிறேன். மேலும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி இருப்பார். ஆர்சிபிக்கு இதுதான் சரியான நேரம் என்று எனக்கு ஒரு உணர்வு வருகிறது” என கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.