சிறுவாணி குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

கோவை: நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து முன்பு தினசரி சராசரியாக 100 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) வரை குடிநீர் எடுக்கப்பட்டது. அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் எடுக்கப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணையில் அணையில் 49.53 அடி வரை நீரைத் தேக்க முடியும். கடந்த 25-ம் தேதி நீர்மட்டம் 21.55 அடியாக இருந்தது. 67.84 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டது. நேற்று 78.53 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அணையில் நேற்று 34.80 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 63 மி.மீ. மழை பெய்துள்ளது” என்றனர்.

கோவையின் மற்றொரு முக்கிய நீராதாரமான பில்லூர் அணை கடந்த 25-ம் தேதி நிரம்பியது. அன்றைய தினத்திலிருந்து 5-வது நாளாக இன்றும் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வந்த 6,520 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.