புதுடெல்லி: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்த் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிஐஐ (CII) வணிக உச்சி மாநாட்டில் இன்று (மே 29) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய அரசு தனது உத்தி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் நம்முடைய மக்கள். நமது குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்று நான் நம்புகிறேன். இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் அந்த நமது சகோதரர்கள் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலைக் கேட்டு இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்கு திரும்புவார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழமான தொடர்பை உணர்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றிப் பேசுகிறது. மேலும் அன்பு, ஒற்றுமை மற்றும் உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம், நமது சொந்தப் பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் திரும்பி வந்து, நான் இந்தியா, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை. பயங்கரவாத நடவடிக்கை செலவு குறைந்ததல்ல என்பதையும், அது மிகப் பெரிய விலையை கேட்கும் என்பதையும் பாகிஸ்தான் இப்போது உணர்ந்திருக்கும்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது ரூ.23,500 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இன்று, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகிய இரண்டுக்கும் இந்தியாவில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவது அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது தளங்களும் அமைப்புகளும் தங்கள் வலிமையைக் காட்டியதால், இந்தியாவின் உள்நாட்டு அமைப்புகள் முழு உலகையும் ஆச்சரியப்படுத்தின. இன்று, நாம் போர் விமானங்கள் அல்லது ஏவுகணை அமைப்புகளை மட்டும் உருவாக்கவில்லை, மேலும் புதிய யுக போர் தொழில்நுட்பத்துக்கும் தயாராகி வருகிறோம்” என்று ராஜ்நாத் தெரிவித்தார்.