மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி இருந்து வருகிறார். இவர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்திராணி மேயரான நாள் முதல், தற்போது வரை இவருக்கும் பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்களுக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரே ஒரு மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மட்டும் மேயர் இந்திராணி ஆதரவாளராக இருந்து வருகிறார்.
மேயர் இந்திராணி பெயரளவுக்கு மேயராகவும், நிழல் மேயராக அவரது கணவர் பொன் வசந்த் செயல்பட்டு வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் தலையிடுவதோடு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
5 ஆணையாளர்கள் மாற்றம்.. மேயர் இந்திராணி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விசுவாசியாக இருந்து வந்ததால், மாநகராட்சி அதிகாரிகளும், மேயரையும், அவரது கணவரையும் அனுசரித்து செல்லாவிட்டால் அமைச்சரை பகைக்க வேண்டியது இருக்கும் என்று நினைத்தனர்.
அதனால், மாநகராட்சி ஆணையாளர்களாக வந்தவர்கள் சிறிது காலம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சென்றனர். இவர்களில் சிலர், மேயர் தரப்பினர் நெருக்கடியாலும், சிலர் இவர்களது நடவடிக்கை பிடிக்காமலும் சென்றனர். அதனால், மேயர் இந்திராணி மேயராகி 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் 5 ஆணையாளர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 6-வது ஆணையாளராக சித்ரா வந்துள்ளார்.
‘அடுத்தது மேயர்?’ – இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்தை, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்தக்கட்டமாக மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை பாய இருப்பதாகவும் கூறப்படுவதால் அவரது பதவிக்கும் ஆபத்து நெருங்கியிருப்பதாக, மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கையின் பின்னணி: இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பொன் வசந்த், முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல் ராஜனின் தீவிர விசுவாசி. அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து வந்தார். திமுக ஆட்சி அமைந்தபோது பழனிவேல் தியாகராஜன், நிதி அமைச்சராகவும், மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகவும் கட்சி, ஆட்சி இரண்டிலுமே செல்வாக்குடன் இருந்து வந்தார்.
அவர் ‘கை’ காட்டும் நபர் மதுரை மேயராக வரக்கூடிய நிலை இருந்ததால், அவர் தனது ஆதரவாளர் பொன் வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். அதற்கு முன்பு வரை, இந்திராணிக்கு அரசியல் அனுபவமே இல்லை. அரசியலிலும் அவர் ஈடுபடவில்லை. அவர் வெற்றி பெற்ற 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் பொன் வசந்த் போட்டியிடாமல் தனது மனைவி இந்திராணியை போட்டியிட வைத்தார்.
மேயராக அவர் பொறுப்பேற்ற போது, இந்தக் கேள்வியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பழனிவேல் தியாகராஜன், ஐஏஎஸ் அதிகாரிகள் அவருக்கு வழிகாட்டுவார்கள், போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை அளித்தார். அவரது ஆலோசனையில் மேயர் இந்திராணி செயல்பட்டு வந்தார்.
ஒதுங்கிய அமைச்சர்; ஓங்கிய மேயரின் கணவர்.. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனிவேல் தியாகராஜன், திடீரென்று நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டார். மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு தனது ஆதரவாளர் வதலை செந்திலை கொண்டு வரமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் கட்சி பொறுப்பில் இருந்தும் பழனிவேல் தியாகராஜன், தன்னை விடுவித்துக் கொண்டார். அதன்பிறகு பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.
இந்த வசதியைப் பயன்படுத்தி மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், பணிகளை டெண்டர் விடுவது, வார்டுகளுக்கு பணி ஒதுக்குவது, மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களை அன்றாடம் இயக்குவது வரை அனைத்து விவகாரங்களிலும் முழுமையாக தலையிட ஆரம்பித்தார்.
இது, மாநகராடை்சி ஆணையாளராக வந்தவர்களுக்கும், இவருக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தியது. அதனால், சில ஆணையாளர்கள் இவரது நெருக்கடியால் மாற்றப்பட்டதும், பலர் இவரது நடவடிக்கை பிடிக்காமல் இடமாறுதல் வாங்கியும் சென்றதும் நடந்ததால் மாநகராட்சி நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்தன.
ஸ்மார்ட் சிட்டி பணிகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைப் பணிகள் தற்போது வரை நிறைவு பெறாமல் இருப்பது போன்றவை மாநகராட்சி ஆணையாளர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டதுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
புறக்கணித்த அமைச்சர்.. சமீப காலமாக மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன் வசந்த் நடவடிக்கைகள் முற்றிலும் பிடிக்காமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவர்களை தன்னை பார்க்க அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு புறமும் தனது ஆதரவு அமைச்சர் கைவிட்ட நிலையில் மற்றொரு புறம் திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் எதிர்ப்பையும் மேயர் இந்திராணியால் சமாளிக்க முடியவில்லை. மாநகராட்சி கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
அதிமுக, சிபிஎம், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போன்ற பிற கட்சி கவுன்சிலர்களுடன், இந்த எதிர்ப்பை, மேயர் இந்திராணி அவரது கணவர் பொன்வசந்த் பின்னணியில் சமாளித்து வந்தார். ஆனாலும், நிழல் மேயர் போல் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் நிறுத்தவில்லை.
இன்னும் அவரது தலையீடு அதிகமானதால், இது தொடர்பாக அடிக்கடி கட்சித் தலைமைக்கு, உள்ளூர் திமுகவினர் புகார்களை தட்டிவிட்டு வந்தனர்.
குழப்பத்தை ஏற்படுத்திய பொன் வசந்த்: இந்தச் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஜூன் 1-ம் தேதி மதுரை உத்தங்குடியில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் செய்து வருகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்கான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகரச் செயலாளர் தளபதி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் கடந்த 23-ம் தேதி காலை வெள்ளிக்கிழமை நடந்தது.
இதே நாளில், இதே நேரத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் இந்திராணி ஏற்பாடு செய்திருந்தார். அதனால், பொறுப்புகளில் உள்ள திமுக கவுன்சிலர்கள், மற்ற திமுக கவுன்சிலர்கள், இரு கூட்டங்களில் எந்த கூட்டத்திற்கு செல்வது என்பதில் தடுமாறினர்.
திமுக நிர்வாகிகளும், கவுன்சிலர்கள் சிலரும், மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த்தை தொடர்பு கொண்டு, மாநகராட்சி கூட்டத்தை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர், கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், வேண்டுமென்றால் அவர்கள் கூட்டத்தை தள்ளி வைக்கட்டும் என்று கூறியுள்ளார். அதனால், திமுக கவுன்சிலர்கள், பெரும்பாலானவர்கள், கட்சி கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, மாநகராட்சி கூட்டத்திற்கு வரவில்லை. வெறும் 22 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், மாநகராட்சி கூட்டம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மேயர் இந்திராணி, அதிமுக, சிபிஎம், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர்கள் துணையுடன் கூட்டத்தை நடத்தினார். தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு கோரம் இல்லாத நிலையில், மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், வெளியில் இருந்து கொண்டே திமுக கவுன்சிலர்களை அழைத்துள்ளார். அவர்களில் ஒரு சிலர் திமுக கூட்டத்தில் இருந்து மாநகராட்சி கூட்டத்திற்கு வந்ததால் அதிமுக மற்றும் தங்கள் கூட்டணி கட்சி கவுன்சிலர்களுடன் தீர்மானத்தையும் நிறைவேற்றி வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி விட்டனர்.
அதிருப்தியடைந்த அமைச்சர்கள்: இது, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்வரை வரவேற்க நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்ததோடு, கட்சி கூட்டத்துக்குப் போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியது தொடர்பாக மாநகர, புறநகர் கட்சிகளில் இருந்து கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றன. மேலும், மாநகராட்சிப் பணிகளில் அதிகாரிகளையும், பணியாளர்களையும் கண்ணியக் குறைவாக பேசுவதாகவும் புகார்கள் சென்றன.
அதனால், முதற்கட்ட நடவடிக்கையாகவே தற்போது மேயர் கணவர் பொன்வசந்த் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடுத்தக்கட்டமாக மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை பாயலாம். இதற்கிடையில் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் அடுத்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆலோசனை செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மேயர் கணவர் பொன்வசந்த் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.