KKR அணி இந்த 3 வீரர்களை கழட்டிவிட்டால் – ஏலத்தில் பல கோடிகள் கையில் இருக்கும்!

Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்றைய குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன. நாளைய எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

குவாலிபயர் 1 போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி அப்படியே தொடரை விட்டு நாக்அவுட்டாகும். எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணி குவாலிபயர் 1 போட்டியில் தோற்ற அணியுடன் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும். இறுதிப்போட்டி வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

Kolkata Knight Riders: 8வது இடத்தில் முடித்த கேகேஆர்

இது ஒருபுறம் இருக்க, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை பிளே ஆப் கூட வராமல் வெறும் 5 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நிறைவு செய்தது. இரண்டு போட்டிகள் மழையால் ரத்தாகியது. இந்த முறை சுனிலின் மேஜிக் பெரிதாக எடுபடவில்லை. ஓபனிங்கிலும் அவருக்கு ஏற்ற ஜோடி செட்டாகவில்லை. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பேட்டிங் ஆர்டரில் பெரும் குழப்பம் இருந்தது. கேப்டன்ஸியும் ஓரளவு சுமாராகவே இருந்தது.

Kolkata Knight Riders: கேகேஆர் கழட்டிவிடும் 3 வீரர்கள்

ரஹானே அடிப்படை விலையில் கடைசியில் மெகா ஏலத்தில் கேகேஆர் அணியால் எடுக்கப்பட்டார். அந்த அணிக்கு கேப்டன் தேவைப்பட்ட காரணத்தால் ரஹானேவின் அனுபவத்தை நம்பி அவரிடம் கேப்டன்ஸியை கொடுத்தனர். ஆனால் அது கைக்கொடுக்கவில்லை. வெங்கடேஷ் ஐயரை பயன்படுத்துவதிலும் பெரிய சிக்கல்கள் இருந்தன. அப்படியிருக்க, கேகேஆர் அணி அடுத்தாண்டு மீண்டு வருவதற்கு மினி ஏலத்திற்கு முன் யார் யாரை விடுவிக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடத்திலும் உள்ளது. அந்த வகையில், கேகேஆர் அணி இந்த 3 வீரர்களை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது எனலாம்.

Kolkata Knight Riders: வெங்கடேஷ் ஐயர்

மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை எடுத்தது. இவரை எடுக்க ஆர்சிபியும் கடுமையாக போராடியது. இருப்பினும் இந்த சீசனில் இவர் தனது முழு திறனை வெளிப்படுத்தவில்லை. பேட்டிங் ஆர்டரிலும் நிலையான இடத்தில் களமிறங்கவில்லை. 11 போட்டிகளில் வெறும் 142 ரன்களையே அடித்திருந்தார். அதில் ஒரு அரைசதம் அடக்கம்.

15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அப்படியிருக்க, இவரை மினி ஏலத்திற்கு விடுவித்துவிட்டு, ஏலத்திலேயே RTM பயன்படுத்தி ஓரளவு குறைந்த தொகையில் எடுத்துக்கொள்ளலாம். நிச்சயம் ரூ.10 கோடிக்கும் கீழ் இவரை மினி ஏலத்தில் வாங்கலாம். எனவே கேகேஆர் அணியிடம் அதிக தொகையும் கையிருப்பில் இருக்கும். 

Kolkata Knight Riders: குவின்டன் டி காக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குவின்டன் டி காக்கை ரூ.3.60 கோடி கொடுத்து எடுத்தது. இந்த சீசனில் இவர் 8 இன்னிங்ஸில் 152 ரன்களை மட்டுமே அடித்தார். அதுவும் ஒரு இன்னிங்ஸில் 97* ரன்களை அடித்திருந்தார். மற்ற 7 போட்டிகளில் 55 ரன்களை மட்டுமே அடித்தார். இவரின் சொதப்பலும் கேகேஆர் தோல்விக்கு முக்கிய காரணம். எனவே இவரை விடுவித்துவிட்டு வேறு வெளிநாட்டு ஓப்பனரை எடுக்க கேகேஆர் திட்டமிடும்.

Kolkata Knight Riders: ஆன்ரிச் நோர்க்கியா

நோர்க்கியா வெறும் 2 போட்டிகளில் இந்த சீசனில் விளையாடியிருந்தார். காரணம், இவர் முன்னர் போல் தொடர்ச்சியாக வேகமாக பந்துவீச சிரமப்படுகிறார். இவரை ரூ.6.8 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது. இருப்பினும் இவரை தக்கவைப்பதற்கு பதில் வேறு வெளிநாட்டு பந்துவீச்சாளர்களுக்கு கேகேஆர் குறிவைக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.