மதுரை: மதுரையில் 22 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இரு பக்கத்திலும் திரண்டு நின்று மக்கள் வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் ‘ரோடு ஷோ’ – மதுரையில் உத்தங்குடியில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) மதியம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 5.30 மணிக்கு பெருங்குடி பெரியார் சிலை அருகில் ‘ரோடு ஷோ’வை தொடங்கினார்.
22 கிலோ மீட்டர்… வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை 22 கிலோ மீட்டர் தூரம் வரை ‘ரோடு ஷோ’ சென்றார். வேனில் அமர்ந்தபடி ‘ரோடு ஷோ’வை தொடங்கிய முதல்வர், பின்னர் வேனிலிருந்து இறங்கி சாலையில் நடக்கத் தொடங்கினார்.
உற்சாக வரவேற்பு: முதல்வரைக் காண சாலையின் இருபக்கமும் திமுக கொடிகள், திமுக கொடி நிறத்திலான குடைகள், பலூன்கள் மற்றும் முதல்வர், உதயநிதி படங்கள் கொண்ட பதாதைகளைப் பிடித்தபடி பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்றிருந்தனர். வழிநெடுகிலும் முதல்வரிடம் பொதுமக்கள் மனுக்களையும், புத்தகங்களையும் வழங்கினர். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வருடன் சென்றனர்.
கைகுலுக்கி மகிழ்ந்த முதல்வர்: முதல்வர் வேனிலிருந்து இறங்கி நடக்கும் போது பொதுமக்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். தன்னை பார்க்க காத்திருந்த சிறுவர், சிறுமிகளை தன் அருகே அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல்வரை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சிறுவன் கொடுத்த முத்தம்… ஜெய்ஹிந்த்புரம் அருகே முதல்வர் நடந்து செல்லும் போது வில்லாபுரத்தில் பாரத மாதா, பாரதியார், கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடமணிந்தபடி சிறுவர்கள் நின்றிருந்தனர். அந்த சிறுவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினர். அப்போது கருணாநிதி வேடம் அணிந்திருந்த சிறுவன் முதல்வரின் கண்ணத்தில் கிள்ளி முத்தம் கொஞ்சினான். உடனே அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர். பின்னர் சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கூட்டம் அதிகரிப்பு… நேரம் ஆக ஆக ‘ரோடு ஷோ’வில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டிருந்தது. முதல்வர் இருபக்கமும் மாறி மாறிச் சென்று பொதுமக்களுடன் கைகுலுக்கியபடி நடந்தார். ஜெய்ஹிந்த்புரத்தில் வீராமகாளியம்மன் கோயில் அருகே நிழற்பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் வழியாக ஆரப்பாளையம் சென்றார். ஆரப்பாளையத்தில் மதுரையின் முதல் மேயர் முத்து வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். இன்றிரவு அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.