ஆந்திராவில் இன்று முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆந்திராவில் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகளுடன் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ரேஷன் கடைகளில் இனி மாதத்தில் 1 முதல் 15-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
கடந்த ஜெகன் ஆட்சியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டு, ரூ.1600 கோடி செலவில் மாநிலம் முழுவதும் ரேஷன் விநியோக வாகனங்கள் இயக்கப்பட்டன. இவை மாதத்தில் 2 நாட்கள் மட்டும் இயங்கின. இதனால் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.