இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமர்சீர் வரி விகிதத்தை அறிவித்தார்.

இதன்படி சீன பொருட்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அண்மையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதன்படி சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே அண்மையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதை குறைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:

அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்த போர் அணு ஆயுத போராக மாறும் அபாயம் எழுந்தது. அமெரிக்கா தரப்பில் இரு நாடுகளிடமும் வர்த்தகத்தை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் துப்பாக்கி குண்டுகளால் மோதுகின்றன. நாங்கள் வர்த்தகத்தை முன்னிறுத்துகிறோம். இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை நிறுத்தியதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். உலகம் முழுவதும் நாங்கள் போரை நிறுத்துகிறோம். உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடாக நாங்கள் விளங்குகிறோம். அமெரிக்க தலைவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக போற்றப்படுகின்றனர்.

வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்கா, இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் ஈடுபட்டால் அந்த நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்ட மாட்டேன். இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.