முன்பு கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தான். ஆனால் தற்போது காலத்திற்கு ஏற்றவாறு கிரிக்கெட் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது, அதன் புதிய வடிவம் தான் டி20 போட்டிகள். இந்த டி20 போட்டிகள் வந்ததிலிருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. தற்போது இளம் வயது வீரர்கள் அனைவரும் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு தங்களது பேட்டிங்கை மாற்றி அமைத்து வருகின்றனர். இதனால் முன்பு போல ஒரு சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் அளவிற்கு கூட ஒரு நாள் போட்டிகளை பலரும் ஆர்வமாக பார்ப்பதில்லை.
டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒரு புதிய கோப்பையை அறிமுகப்படுத்தியது. தற்போது மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் முடிவடைந்து நான்காவது தொடர் தொடங்க உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் ஐசிசி விரைவில் புதிய விதிகளை கொண்டு வருவது, அதன்படி முதல் ஓவர் முதல் 34வது ஓவர் வரை இரண்டு முனைகளில் இருந்தும் ஒவ்வொரு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும். 35 வது ஓவர் முதல் 50 வது ஓவர் வரை ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். இதன் மூலம் பௌலர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும்.
பழைய பந்து பயன்படுத்தப்படாததால் பவுலர்களால் ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். முன்பு ஜாகிர்கான், முனாப் படேல் போன்ற பவுலர்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை சிறப்பாக பயன்படுத்தி வந்தனர். தற்போது பழைய பந்துகள் பயன்படுத்தப்படாததால் பேட்டர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக ஐசிசி இந்த விதிகளை கொண்டு வர உள்ளது. அதேபோல ஒரு வீரருக்கு தலையில் காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவதிலும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது உள்ள விதிகளில் சில குளறுபடிகள் இருப்பதால் அது சில அணிகளுக்கு பாதகமாக அமைவதாக கூறப்படுகிறது.
அதன்படி இனி ஒரு போட்டி தொடங்குவதற்கு முன்பு விக்கெட் கீப்பர், பவுலர், பேட்ஸ்மேன், சுழற் பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர் ஆகியோர்களின் பெயர்களை மூன்றாம் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு வீரருக்கு அடிபட்டால் அந்த கொடுக்கப்பட்ட லிஸ்டில் இருக்கும் மட்டுமே வீரர்களை மாற்ற வேண்டும் என்றும் புதிய விதிகள் வரவுள்ளது. அடுத்ததாக ஒரு நாள் உலக கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அதற்குள் ஒருநாள் போட்டிகளை சுவாரசியமாக மாற்ற முடிந்தவற்றை ஐசிசி மேற்கொள்ள உள்ளது.