டெல்லி – என்சிஆர் பகுதிகளில் புழுதிப் புயல்: இந்திரா காந்தி விமானநிலையத்தில் சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி: டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் மழை காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சமீபத்திய தகவலின்படி, மாலை 5 முதல் 5.30 மணி வரை டெல்லிக்கு வந்த நான்கு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் இருந்து வந்த இரண்டு விமானங்கள், சண்டிகர் மற்றும் அமிர்தசரஸில் இருந்து வந்த தலா ஒரு விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனிடையே டெல்லி விமான நிலையம் அதன் எக்ஸ் பதிவில், சமீபத்திய விமான சேவைகளின் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுனங்களைத் தொடர்பு கொள்ளும்படி பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

விமானநிலையம் அதன் பதிவில், “டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. களத்தில் இருக்கும் எங்களின் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு, தடையற்ற பயண அனுபவத்துக்காக முயற்சித்து வருகின்றன.

விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் புழுதிப்புயல்: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் லேசான மழையுடன் புழுதிப்புயலும் ஏற்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 2 மணிநேரத்தில், டெல்லி, என்சிஆர், பகுதிகளில் புழுதிப்புயலும் அதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

வானிலை முன்னறிவிப்பின்படி, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளான நொய்டா, குருகிராம் மற்றும் பரிதாபாத் பகுதிகளில் வசிப்பவர்கள் சமூக வலைதளங்களில் புழுதிப்புயல் வீடியோக்களை பகிர்ந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.