ஆர்சிபி பேரணிக்கு அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்-மந்திரி சித்தராமையா கூறிய தகவல்

பெங்களூரு,

ஆர்சிபி அணிக்கான பாராட்டு விழா நடந்த சின்னசாமி மைதானத்தின் வெளியே நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்த்ரி சித்தராமையா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் துயரமான நிகழ்வு நடந்துள்ளது. இந்த விபத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டேன். வெற்றிகொண்டாட்டத்தின்போது இதுபோன்ற ஒரு துயரம் சம்பவம் நடத்திருக்கக்கூடாது. இந்த துயர சம்பவத்திற்காக அரசு துக்கம் அனுசரிக்கிறது. சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மைதானம் அருகே கூடினார்கள். விதான் சவுதாவில் நடைபெற்ற நிகழ்வில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்வில்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம்பேர் அமரும் வகையில் வசதிகள் உள்ளன. ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடி விட்டார்கள். இவ்வளவு கூட்டம் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.சில ஆயிரம் பேர் மட்டுமே கூடுதலாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது.

பெங்களூரு விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அரசு வழங்கும். காயமடைந்ந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும்.மொத்தம் 47 பேர் காயமடைந்தனர். சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். காயமடைந்த 47 பேரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தவிவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. பாஜக செய்யும் அரசியலுக்கும் நான் பதில் கூற விரும்பவில்லை. யார் மீது தவறு இருந்தாலும் முறையான விசாரணை நடத்தவே நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். நீதி விசாரணையின் முடிவிலேயெ பாதுகாப்பு குறைபாடு காரணமா? என்பது தெரியவரும்.

மைதானத்திற்குள் செல்லும் நுழைவு வாயில் சிறியதாக இருந்ததாலும், ஒரே நேரத்தில் குவிந்ததாலும் விபத்து ஏற்பட்டது. 2 முதல் 3 லட்சம் பேர் வரை குவிந்துவிட்டதால் விபத்து நேரிட்டது. அதிகமான கூட்டம்தான் விபத்து காரணம் என்று தெரிய வருகிறது.கிரிக்கெட் வாரியமும் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

நேற்று பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று காலை பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பாராட்டு விழா குறித்து ஆலோசனை நடத்தும் போது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. வெற்றிபேரணிக்கு திட்டமிட்டபோது அனைத்து அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தனர். இதுபோன்ற கூட்டநெரிசல் சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்தது. இது எதிர்பாராமல் நிகழ்ந்ததாக கருதுகிறேன். விதான சவுதாவில் நிகழ்ச்சி நடத்த நாங்கள் முடிவு செய்யவில்லை. கர்நாடகா கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதன் பேரில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது,இதற்கு முன் பல நேரங்களில் கூட்ட நெரிசல் விபத்துகள் நடந்துள்ளன. கும்பமேளாவில் 50 முதல் 60 பேர் வரை உயிரிழந்தனர். அதையெல்லாம் குற்றம்சாட்ட முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.